டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் - ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு


டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் - ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு
x
தினத்தந்தி 11 Feb 2019 10:45 PM GMT (Updated: 11 Feb 2019 10:00 PM GMT)

சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

புதுடெல்லி, 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார்.

அதன்படி டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று அவர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் முன், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் ஆந்திர பவனுக்கு வந்து அங்குள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, காலை 8 மணி அளவில் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

‘தர்ம போராட்ட தீக்‌ஷா’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவருடன் ஆந்திர மாநில மந்திரிகள், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பவனுக்கு சென்று உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர மாநில மக்களின் கோரிக்கைக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை, பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டார். பிரதமர் மோடி எங்கே சென்றாலும் பொய் சொல்கிறார். இதனால் அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்.

ஆந்திர மாநில மக்களின் பணத்தை அவர் திருடி, அனில் அம்பானியிடம் கொடுத்துவிட்டார். (ரபேல் போர் விமானங்கள் வாங்கும் பேரத்தில் பாரதீய ஜனதா அரசு ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வருவதை அவர் இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டார்.)

நாங்களெல்லாம் (எதிர்க்கட்சிகள்) ஓரணியாக திரண்டு இருக்கிறோம். பாரதீய ஜனதாவை தோற்கடிப்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி மூத்த தலைவர் முலாயம் சிங், அந்த கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, லோக் தந்திரிக் ஜனதாதள தலைவர் சரத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன், தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட தலைவர்களும் நேரில் வந்து, சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும் என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் டெல்லி வந்து உண்ணாவிரதம் இருப்பதாகவும், இது நாட்டில் கூட்டாட்சி அமைப்பு குறித்த கேள்வியை எழுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதா அதை வழிமொழிந்தது. ஆனால் இப்போது அந்த கட்சியைச் சேர்ந்த மத்திய நிதி மந்திரி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்கிறார்.

மாநில பிரிவினையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு 5 கோடி ஆந்திர மக்களின் சார்பில் நினைவுபடுத்தும் வகையிலும், மத்திய அரசை எச்சரிக்கும் வகையிலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறேன்.

இந்த நாட்டை ஆள்வதற்கு மோடி தகுதியற்றவர். டெல்லியில் இருக்கும் நீங்கள் எங்களை புறக்கணித்துவிடலாம் என்று நினைத்தால் அது தவறாக முடிந்துவிடும். எங்களுடன் நட்புறவுடன் இருக்கும் கட்சிகளின் உதவியுடன் எங்கள் லட்சியத்தை அடைவோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.


Next Story