ரபேல்: பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்


ரபேல்: பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்
x
தினத்தந்தி 12 Feb 2019 1:53 AM GMT (Updated: 12 Feb 2019 1:53 AM GMT)

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு  பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. 2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது. 

இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.   இதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார். ஆனால், ரபேல் ஒப்பந்தத்தில் பெரும் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் பிரதமர் மோடிதான் இதற்கு பொறுப்பு எனவும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இந்த நிலையில்,  ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) மேற்கொண்ட தணிக்கையின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள  உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தற்போதைய அரசின் கடைசி கூட்டத் தொடராகும். விமானத்தின் விலை தொடர்பான தகவல் எதுவும் இந்த அறிக்கையில் இடம் பெறாது எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ரபேல் ஒப்பந்தத்தில் ஏற்கெனவே தொடர்புடையவர் என்ற காரணத்தால், அதன் தணிக்கை நடவடிக்கையில் இருந்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) ராஜீவ் மெஹரிஷி தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் ராஜீவ் மெஹரிஷி நிதித் துறைச் செயலராக இருந்ததை குறிப்பிட்டு அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் இவ்வாறு கூறினார். 

Next Story