காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டணம்


காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல்: உலக நாடுகள் கடும் கண்டணம்
x
தினத்தந்தி 15 Feb 2019 12:52 AM GMT (Updated: 15 Feb 2019 1:01 AM GMT)

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள் உடன் சென்றன. மாலை 6 மணிக்குள் அவர்கள் சென்றடைய திட்டமிட்டிருந்தனர்.

வழக்கமாக ஒரே நாளில் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்து செல்வதுதான் வழக்கம். ஆனால் கடந்த 2, 3 நாட்களாக அந்த நெடுஞ்சாலையில் மோசமான வானிலை மற்றும் நிர்வாக காரணங்களால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால்தான் துணை ராணுவ வீரர்கள் ஒரே நாளில் 78 வாகனங்களில் மொத்தமாக சென்றனர். அவர்களது வாகனங்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன.

அப்போது பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. தாக்குதலுக்கு உள்ளான பஸ்சில் பயணம் செய்த வீரர்கள் அனைவரும் உடல் சிதறிப்போய் விழுந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடம் ரத்தக்களறிகளாலும், வீரர்களின் உடல் உறுப்புகளாலும் போர்க்களம் போல காணப்பட்டது.கார் குண்டு தாக்குதல் நடைபெற்ற இடம் காஷ்மீர் மாநிலத்தின் கோடை கால தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

படுகாயம் அடைந்த வீரர்கள் அங்கிருந்து உடனடியாக மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி புலவாமா மாவட்டம், காக்கபோரா பகுதியை சேர்ந்த அதில் அகமது எனவும், அவன் கடந்த ஆண்டுதான் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளான் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரில் நிரப்பப்பட்டிருந்தவை, ஐ.இ.டி. வகையை சேர்ந்த பயங்கர வெடிகுண்டுகள் என தெரிய வந்துள்ளது.

உலக நாடுகள் கண்டனம்

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். மேலும், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். அதேபோல், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. 


Next Story