ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 18 Feb 2019 1:55 AM GMT (Updated: 18 Feb 2019 1:55 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. 2 பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம் அடைந்தனர். சுற்றி வளைக்கப்பட்ட 2 பயங்கரவாதிகளும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story