ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்


ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில்  4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
x
தினத்தந்தி 18 Feb 2019 3:23 AM GMT (Updated: 18 Feb 2019 3:23 AM GMT)

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பின்க்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்த 4 பேரில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார்.  வீர மரணம் அடைந்த வீரர்கள் 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவைச்சேர்ந்தவர்கள் ஆவர். 


Next Story