தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் உப்பல் பகுதியை சேர்ந்தவர் கோவர்தன் ரெட்டி (வயது 48). இவருக்கு ஷோபனா ராணி என்ற மனைவியும் ஸ்ரேயா (15), துளசி (12) என்ற மகள்களும் உள்ளனர். குடும்பம் ஐதராபாத்தில் வசிக்க, கோவர்தன் ரெட்டி கடந்த 5 வருடங்களுக்கு முன் வேலைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகொலா நகரில் பெட்ரோல் பங்குடன் இணைந்த டிப்பார்ட்மண்டல் ஸ்டோர் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் பணியாற்றும் கடைக்கு நேற்று வந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதில், கோவர்தன் ரெட்டி சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். டிப்பார்ட்மண்டல் ஸ்டோரில் இருந்து பணம் எதையும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் திருடிச்செல்லவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
இதை உறுதிப்படுத்திய கோவர்தன் ரெட்டியின் உறவினர் மதுசூதன் ரெட்டி, இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் நடந்தது என்றும் உடலை இந்தியா கொண்டு வர தெலுங்கானா அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story