இந்திய விமானப்படையின் அதிரடி நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள்


இந்திய விமானப்படையின் அதிரடி நடவடிக்கைக்கு குவியும் பாராட்டுக்கள்
x
தினத்தந்தி 26 Feb 2019 5:25 AM GMT (Updated: 26 Feb 2019 5:25 AM GMT)

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ் -2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. 

12 போர் விமானங்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்த அதிரடி தாக்குதலில், பலாகோட், சகோதி, முசாப்பர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது. 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா விமானப்படையின் நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டரில், ”இந்திய விமானப்படைக்கு என் வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்,  நம்மை பெருமை அடையச்செய்ய வைத்திருக்கிற இந்திய விமானப்படையின் தீரம் மிக்க விமானிகளுக்கு என் வணக்கத்தை செலுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “ நமது விமானப்படை மற்றும் விமானிகளின் தீரச்செயலை நாங்கள் வணங்குகிறோம். நமது படை வீரர்களால் நாம் பெருமை அடைகிறோம். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


Next Story