காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது


காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
x
தினத்தந்தி 27 Feb 2019 10:56 PM GMT (Updated: 27 Feb 2019 10:56 PM GMT)

காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப்படை விமானங்கள் அதிரடியாக சுட்டு வீழ்த்தின.

ஜம்மு, 

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்திய போர் விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்ததை பாகிஸ்தானால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே இந்தியாவை எப்படியாவது தாக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த நாட்டு அரசும், பாதுகாப்பு படைகளும் திட்டமிட்டன.

இதை நிறைவேற்றும் முனைப்பில் ஒருபுறம் காஷ்மீர் எல்லையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அந்த நாட்டு ராணுவத்தினர் பீரங்கி தாக்குதலை அரங்கேற்றினர். ஆனால் அதற்கு இந்திய வீரர்களும் கடும் பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தானால் நினைத்ததை நிறைவேற்ற முடியவில்லை.

எனவே போர் விமானங்கள் மூலம் இந்திய பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த அந்த நாட்டு விமானப்படை திட்டமிட்டது. இதை நிறைவேற்றுவதற்காக பாகிஸ்தானின் எப்–16 ரகத்தை சேர்ந்த 3 விமானங்கள் திடீரென காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்தன. ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியை குறிவைத்து அந்த விமானங்கள் முன்னேற தொடங்கின.

ஆனால் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியபின் எத்தகைய எதிர்ப்பையும் சமாளிக்கும் நோக்கில் இந்திய விமானப்படை தயாராகவே இருந்தது. அப்படி கண்விழித்து காத்திருந்த விமானப்படையின் ரேடார் கண்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் பட்டன. உடனே எதிர் தாக்குதலுக்கு இந்திய விமானப்படை விமானங்கள் தயாராகின.

அதன்படி இந்தியாவின் மிக்–21 ரக விமானங்கள் கண் இமைக்கும் நேரத்தில் வானில் சீறிப்பாய்ந்து பாகிஸ்தான் விமானங்களை தடுத்து நிறுத்தின. அத்துடன் நில்லாமல் அந்த விமானங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசின. இதை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் விரைந்தன.

எனினும் விடாமல் துரத்திய மிக்–21 விமானங்கள், பாகிஸ்தான் போர் விமானத்தில் ஒன்றை சுட்டு வீழ்த்தின. அந்த விமானத்தின் பாகங்கள் லாம் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்தன. அந்த விமானத்தை செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். மற்ற 2 விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் தப்பி சென்றன.

பாகிஸ்தான் விமானங்களின் இந்த அத்துமீறல் காஷ்மீர் எல்லையில் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. எனினும் பாகிஸ்தானின் எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க தகுந்த விழிப்புடன் உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story