மும்பையில் 50 ஆயிரம் போலீசாருக்கு இனிப்பு பொட்டலம் - முகேஷ் அம்பானி அனுப்பினார்


மும்பையில் 50 ஆயிரம் போலீசாருக்கு இனிப்பு பொட்டலம் - முகேஷ் அம்பானி அனுப்பினார்
x
தினத்தந்தி 8 March 2019 8:41 PM GMT (Updated: 8 March 2019 8:41 PM GMT)

மகன் திருமணத்தை முன்னிட்டு, மும்பையில் 50 ஆயிரம் போலீசாருக்கு இனிப்பு பொட்டலங்களை முகேஷ் அம்பானி அனுப்பினார்.

மும்பை,

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்தநிலையில் அவரது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் இன்று (சனிக்கிழமை) ஆடம்பரமாக நடக்க இருக்கிறது. இந்த திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்தநிலையில், தனது மகனின் திருமணத்தையொட்டி முகேஷ் அம்பானி மும்பை பெருநகரத்தில் பணிபுரியும் 50 ஆயிரம் போலீசாருக்கு இனிப்பு பொட்டலங்கள் அனுப்பி இருக்கிறார். போலீசாருக்கு வினியோகம் செய்யும் வகையில் இந்த இனிப்பு பொட்டலங்கள் மும்பையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அந்த இனிப்பு பொட்டலங்களில் ஆகாஷ் அம்பானிக்கு வாழ்த்து மற்றும் ஆசீர்வாதம் வேண்டும் வாசகங்களுடன், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது மகன்கள், மகளின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது.

Next Story