வீடியோவை பார்த்து குழந்தை பெற முயன்ற திருமணம் ஆகாத இளம்பெண் பலி


வீடியோவை பார்த்து குழந்தை பெற முயன்ற திருமணம் ஆகாத இளம்பெண் பலி
x
தினத்தந்தி 12 March 2019 3:40 PM GMT (Updated: 12 March 2019 3:40 PM GMT)

மொபைல் போனில் வீடியோவை பார்த்து குழந்தை பெற்றெடுக்க முயன்ற திருமணம் ஆகாத இளம்பெண் பலியானார்.

கோரக்பூர்,

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்காக படித்து வருகிறார்.  இதற்காக கடந்த 4 வருடங்களுக்கு முன் கோரக்பூருக்கு சென்றுள்ளார்.  கடந்த 4 நாட்களுக்கு முன் அவர் பிலாந்த்பூர் பகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளார்.  அங்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரது அறையில் இருந்து கதவு வழியே ரத்தம் வழிந்தோடி வெளியேறியுள்ளது.  இதனை கவனித்த மற்ற குடியிருப்புவாசிகள் அளித்த தகவலின் பேரில்  விசாரணை நடத்த போலீசார் அங்கு சென்றனர்.

இதில், இளம்பெண் மற்றும் அவரது குழந்தை ரத்தம் வழிந்தோட இறந்து கிடந்துள்ளது தெரிய வந்தது.  அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  மொபைல் போன் வழியே குழந்தை பெற்றெடுக்கும் வீடியோவை பார்த்து, தனது குழந்தையை பெற்றெடுக்க அவர் முயற்சித்து உள்ளார்.  இதில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

அவரது குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்காத நிலையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை.  அவர் யாருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற விவரத்தினையும் இளம்பெண்ணின் பெற்றோர் வெளியிடவில்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story