ராகுல் காந்தி, பிரியங்காவுக்கும் நில பேர ஊழலில் தொடர்பு - மத்திய மந்திரி அதிரடி குற்றச்சாட்டு


ராகுல் காந்தி, பிரியங்காவுக்கும் நில பேர ஊழலில் தொடர்பு - மத்திய மந்திரி அதிரடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 March 2019 10:45 PM GMT (Updated: 13 March 2019 9:15 PM GMT)

ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கும் நில பேர ஊழலில் தொடர்பு இருப்பதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஸ்மிரிதி இரானி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தொடர்புடைய நில பேர ஊழலில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருப்பதாக பத்திரிகை செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான எச்.எல்.பாவா, ராபர்ட் வதேராவுடன் தொடர்புடைய மகேஷ் குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு பேரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் நிலம் வாங்கி உள்ளனர்.

சர்ச்சைக்குரிய ஆயுத வர்த்தகர் சஞ்சய் பண்டாரியின் நண்பரான சி.சி.தம்பி என்பவர்தான் எச்.எல்.பாவாவுக்கு பணம் கொடுத்துள்ளார். நில பேரத்தில், எச்.எல்.பாவாக்கும், தனக்கும் உள்ள தொடர்பை ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த நில பேர ஊழலில், ராபர்ட் வதேரா, வெறும் முகமூடி மட்டும்தான். ராகுல் காந்திதான் உண்மையான முகம். இது ஒரு குடும்ப ஊழல். ஊழலையே இவர்கள் ஸ்தாபனமயமாக்கி விட்டனர்.

ரபேல் ஒப்பந்தத்தை ராகுல் காந்தி எதிர்ப்பதற்கு கூட அவரது பொருளாதார நலன் மற்றும் குடும்பநலன்தான் காரணம். ஏனென்றால், ஒரு போட்டி கம்பெனி, ஒப்பந்தம் பெறுவதையே ராகுல் காந்தி விரும்பினார். இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.

இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி உறுதி என்பதால், பிரதமர் மோடியும், அவருடைய ஆதரவாளர்களும் முற்றிலும் அடிப்படையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்” என்றார்.


Next Story