மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை: ராகுல் காந்தி கொண்டாடுவது ஏன்? - பா.ஜனதா கேள்வி


மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை: ராகுல் காந்தி கொண்டாடுவது ஏன்? - பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 14 March 2019 11:45 PM GMT (Updated: 14 March 2019 9:50 PM GMT)

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை போட்டதால், நாடே வேதனையில் இருக்கும்போது ராகுல் காந்தி கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன்? என்று பா.ஜனதா கேள்வி விடுத்துள்ளது.

புதுடெல்லி,

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐ.நா. தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதுபற்றி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சீனாவின் முடிவு குறித்து பலவீனமான பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து மோடி பயப்படுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், ராகுல் காந்திக்கு பா.ஜனதா சார்பில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீனாவின் நிலைப்பாட்டால் நாடே வேதனையில் இருக்கும்போது, ராகுல் காந்தி கொண்டாட்ட மனநிலையில் இருப்பது ஏன்? அவரது கருத்தின் மூலம், அவர் மசூத் அசாருக்கு நெருக்கமானவர் என்று தோன்றுகிறது.

ராகுல் காந்தியின் கருத்து, பாகிஸ்தான் பத்திரிகைகளில் தலைப்புச்செய்தி ஆகலாம். அதை பார்த்து ஜெய்ஷ் இ முகமது மகிழ்ச்சி அடையலாம். அது ராகுல் காந்தியை குஷிப்படுத்தக்கூடும்.

சீன மந்திரிகளை சந்தித்தது பற்றியும் ராகுல் காந்தி கூறியுள்ளார். தான் மானசரோவர் யாத்திரை சென்றபோது, டெல்லியில் உள்ள சீன தூதரகம் தன்னை வழியனுப்ப விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி, மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமாறு சீனாவை அவர் வலியுறுத்தி இருக்க வேண்டும்.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இத்துடன் 4-வது தடவை முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, 2009, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முயற்சி நடந்தது. 2009-ம் ஆண்டு, மன்மோகன்சிங் ஆட்சியிலும் சீனா இதேபோன்று தடுத்தபோது, ராகுல் காந்தி மவுனம் காத்தது ஏன்?

ஆனால், இப்போதுதான் முதல்முறையாக இந்த தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 3 நிரந்தர நாடுகள் ஆதரித்துள்ளன. இதர உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர். இவையெல்லாம் ராஜ்யரீதியாக இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலகம், இந்தியாவின் பக்கம் நிற்பதையே இது காட்டுகிறது.

வெளியுறவு கொள்கைகள், டுவிட்டரில் இருந்து நடத்தப்படுவது இல்லை என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர், சீனா என 2 பிரச்சினைகளிலும் உண்மையிலேயே தவறு செய்தவர், ஒரே நபர்தான். அவர் ஜவகர்லால் நேரு.

கடந்த 1955-ம் ஆண்டு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தபோது, அதை ஏற்காமல், சீனாதான் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்று மாநில முதல்-மந்திரிகளுக்கு நேரு கடிதம் எழுதினார்.

எனவே, உண்மையிலேயே பாவம் செய்தவர் யார் என்று ராகுல் காந்தி சொல்லத்தயாரா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story