தெலுங்குதேசம் கட்சிக்கு இதுவே கடைசி தேர்தல் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தாக்கு


தெலுங்குதேசம் கட்சிக்கு இதுவே கடைசி தேர்தல் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தாக்கு
x
தினத்தந்தி 16 March 2019 8:56 PM GMT (Updated: 16 March 2019 8:56 PM GMT)

தெலுங்குதேசம் கட்சிக்கு இதுவே கடைசி தேர்தல் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நகரி,

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகரான விஜயசாய் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் 3 கோடியே 53 லட்சத்து 74 ஆயிரத்து 337 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 3 கோடியே 49 லட்சத்து 23 ஆயிரத்து 171 வாக்காளர்கள் இருந்தனர்.இந்தியா முழுவதும் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.37 கோடியாக அதிகரித்து உள்ளது. ஆனால் ஆந்திராவில் மட்டும் 10 சதவீதம் குறைந்துள்ளது. ஏனென்றால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர்கள், எந்த கட்சியையும் சாராதவர்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மூலம் அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நீக்கிவிட்டார். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவாளர்களை இருவேறு பகுதிகளில் வாக்காளர்களாக சேர்த்துவிட்டார். தான் வெற்றி பெற முடியாது என்பதால் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார். எந்த கூட்டமாக இருந்தாலும் அவர், ஜெகன் மோகன் ரெட்டியை திட்டுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல் என்பதை அந்த கட்சியினரே நன்கு உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story