விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி: தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் - காங்கிரஸ் எச்சரிக்கை


விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி: தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் - காங்கிரஸ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 March 2019 10:45 PM GMT (Updated: 17 March 2019 9:12 PM GMT)

விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம், தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் என காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். தேர்தல் நேரத்தில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விவசாயிகளின் நிதியுதவி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மேலும் அனுமதிக்கப்படுமா? என்று அனைவரின் பார்வையும் தேர்தல் கமிஷன் மீதே இருக்கிறது. தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது நிதியுதவி அளிப்பது, ஓட்டுக்கு அளிக்கும் லஞ்சம் என்பது வெளிப்படையாக தெரிகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

பணமதிப்பு நீக்கத்தை அனுமதித்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை சீரழிந்ததாக கூறியுள்ள ப.சிதம்பரம், அதைப்போல விவசாய நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story