மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார்
x
தினத்தந்தி 21 March 2019 10:15 AM GMT (Updated: 21 March 2019 10:15 AM GMT)

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் செருபலச்சேரி பகுதியில் பிறந்த குழந்தையொன்று சாலையோரம் கிடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தையின் தாயை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியது. 10 மாதங்களுக்கு முன்னதாக அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்துள்ள 21 வயது இளம்பெண், கல்லூரி இதழ் ஒன்றுக்கு தகவல் சேகரிக்க சென்றபோது இச்சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையும், பெண்ணும் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட மாணவி கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர் என்றும், கட்சிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்சி விரிவான விசாரணையை மேற்கொள்ளும். போலீசாரும் உண்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தில் குற்றவாளியிடம் போலீசார் விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், மார்க்சிஸ்ட் அலுவலகம் இப்போது பலாத்கார மையமாகியுள்ளது. இதனை கூற வருத்தம் அடைகிறேன். ஆனால் இதுதான் உண்மை. இடதுசாரிகள் ஆட்சியில் கேரளாவில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமையை உணர்கிறார்கள், என குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் போராட்டமும்  மேற்கொண்டுள்ளனர். 

Next Story