திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி


திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி
x
தினத்தந்தி 25 March 2019 1:10 PM GMT (Updated: 25 March 2019 9:44 PM GMT)

நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது.

கொல்கத்தா,

மம்தா பானர்ஜியை நேற்று கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், அதன் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் அவர் அறிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். கொல்கத்தா நாபன்னாவில் உள்ள தலைமை செயலகத்தில் கமல்ஹாசன், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பு பற்றி கமல்ஹாசன் கூறும்போது இது வழக்கமான அரசியல் என்றார். ஆனாலும் என்னென்ன விஷயங்கள் பேசினார்கள் என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னர் தலைமை செயலகத்திற்கு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. நான் மாநில அளவில் ஒரு சிறிய கட்சி வைத்துள்ளேன். மம்தா பானர்ஜியின் வாழ்த்துகளை பெறுவதற்காக வந்தேன்.

மக்கள் நீதி மய்யம் அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இந்த உறவு எதிர்காலத்திலும் பரிணமிக்கும் என நாங்கள் நம்புகிறோம். அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மம்தா பானர்ஜி கூறும்போது, “அந்தமான் தொகுதியில் கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்” என்றார்.



Next Story