குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு


குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 March 2019 12:15 AM GMT (Updated: 25 March 2019 11:36 PM GMT)

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக் கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை 3 தவணைகளாக பிரித்து அவர்களுடைய வங்கி கணக் கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த திட்டம் பற்றிய முழு விவரங்களை நேற்று அவர் அதிரடியாக வெளியிட்டார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், ராகுல் காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. இந்த திட்டம் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில், ஏழைகள் மிகுந்த சிரமம் அனுபவித்து உள்ளனர். எனவே, அவர்களுக்கு நீதி வழங்கப்போகிறோம். அதற்காக, மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த போகிறோம்.

இதன்படி, மிகவும் வறிய நிலையில் (பரம ஏழைகள்) உள்ள 20 சதவீத குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டொன்றுக்கு ரூ.72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

5 கோடி குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். அந்த குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர், இத்திட்டத்தால் நேரடியாக பலன் பெறுவார்கள்.

இந்த திட்டத்தால் ஏற்படும் நிதி தாக்கத்தை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்து விட்டது. கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக எல்லா கணக்கீடுகளையும் போட்டுப் பார்த்து விட்டோம். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த திட்டத்தை இறுதி செய்து உள்ளோம்.

இது, நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம். மிகவும் சக்திவாய்ந்த, அதிரடி மாற்றத்தை உருவாக்கக்கூடியது.

இந்த நாள், வரலாற்று சிறப்புமிக்க நாள். மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. வறுமைக்கு எதிரான இறுதி தாக்குதல் தொடங்கிவிட்டது. இந்த நாட்டில் இருந்து வறுமையை அகற்றியே தீருவோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், ஏற்கனவே 14 கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு உள்ளோம்.

இந்த திட்டத்தின் மூலம், இன்னும் 25 கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்போகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், 5 கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்படும்.

உலகத்திலேயே இதுதான் மிகப்பெரிய குறைந்தபட்ச வருமான திட்டம். உலகத்தில் எங்குமே இதுபோன்ற திட்டம் கிடையாது.

நரேந்திர மோடி, பணக்காரர்களுக்கு பணத்தை கொடுத்தநிலையில், நாங்கள் ஏழைகளுக்கு பணம் கொடுக்கப்போகிறோம். மோடி, இரண்டு இந்தியாக்களை உருவாக்கினார். நாங்கள் இரண்டு இந்தியாக்களை அனுமதிக்க மாட்டோம். ஒரே இந்தியாதான் இருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

அப்போது, நிருபர்கள் குறுக்கிட்டு, “இந்த திட்டத்துக்கு பணம் எங்கிருந்து வரும்? பொருளாதாரத்துக்கு இதனால் பாதிப்பு ஏற்படாதா?” என்று கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

நாட்டில் போதுமான பணம் இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி இந்த உத்தரவாதத்தை அளிக்கிறது. மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் அளித்த வாக்குறுதியை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

அதுபோல், இன்று ஏழைகளுக்கு நீதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன். இந்த திட்டம், படிப்படியாக அமல்படுத்தப்படும். முதலில், சோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்ட பிறகு, முழுமையாக செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் பணம் எடுக்கப்பட்டு வருகிறது. அது எப்படி நடக்கிறது என்பதை உங்களுக்கு காட்டுவோம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Next Story