குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டிடிவி தினகரன் வழக்கு: விசாரணை துவங்கியது


குக்கர் சின்னம் ஒதுக்க கோரி டிடிவி தினகரன் வழக்கு: விசாரணை துவங்கியது
x
தினத்தந்தி 26 March 2019 5:18 AM GMT (Updated: 26 March 2019 5:18 AM GMT)

குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.

புதுடெல்லி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த 15-ந் தேதியன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்ததுடன், டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கின் மீதான விசாரணையை 25-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர் ஆஜராகி, தங்கள் தரப்புக்கு பொதுச்சின்னமான குக்கர் சின்னம் ஒதுக்கத்தான் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், வேட்பு மனு தாக்கல் நாளை (இன்று) மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது என்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி, கோர்ட்டில் ஆஜராகி இருந்த தேர்தல் கமிஷன் அதிகாரியிடம் ஏற்கனவே உத்தரவிட்டபடி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, ஹோலி விடுமுறை இருந்ததால் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி, “கோர்ட்டுக்குத்தான் விடுமுறை. உங்களுக்கு என்ன? பொதுச்சின்னம் அடங்கிய பட்டியலை கூட கொண்டு வரவில்லை. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. இன்று மாலை (நேற்று) 5.30 மணிக்குள் தேர்தல் கமிஷன் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். அதன்படி, இன்று காலை மேற்கூறிய வழக்கில் விசாரணையை துவங்கியுள்ளது. டிடிவி தினகரன் சார்பில் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். 

Next Story