டுவிட்டரில் பாடல் வெளியிட்டார்: ராணுவ வீரர்களுக்கு லதா மங்கேஷ்கர் கவிதாஞ்சலி - பிரதமர் மோடி பாராட்டு


டுவிட்டரில் பாடல் வெளியிட்டார்: ராணுவ வீரர்களுக்கு லதா மங்கேஷ்கர் கவிதாஞ்சலி - பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 30 March 2019 10:45 PM GMT (Updated: 30 March 2019 9:58 PM GMT)

ராணுவ வீரர்களுக்காக, பாடகி லதா மங்கேஷ்கர் கவிதாஞ்சலி என்ற பாடலை டுவிட்டரில் வெளியிட்டார். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், இந்தியில் பாடல் ஒன்றை எழுதி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு ஆற்றிய உரை ஒன்றை கவனித்தேன். அதில் அவர் ஒரு கவிதையின் சில வரிகளை குறிப்பிட்டு இருந்தார். அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த வரிகள் எனது மனதை தொட்டன. எனவே அந்த கவிதையை பதிவு செய்து பாடலாக வெளியிட்டு உள்ளேன். நாட்டின் தீரமிக்க வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.

பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின் ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘நான் தாய் நாட்டின் மீது சத்தியமாக கூறுகிறேன், இந்த நாட்டை விட்டுவிட மாட்டேன்’ என்ற கவிதையை கூறியிருந்தார். இதை மையமாக வைத்தே லதா மங்கேஷ்கர் அந்த பாடலை வெளியிட்டு உள்ளார்.

அவரது இந்த செயலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். ராணுவ வீரர்கள் மீது லதா மங்கேஷ்கர் வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடே இந்த பாடல் என அவர் கூறியுள்ளார்.

Next Story