காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: லஸ்கர் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: லஸ்கர் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 1 April 2019 10:15 PM GMT (Updated: 1 April 2019 9:34 PM GMT)

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில், லஸ்கர் இ தொய்பா தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் பலியானார்கள்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் லஸ்சிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்களும், போலீசாரும் நேற்று அதிகாலை அங்கு விரைந்தனர்.

கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர். ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது, அந்த இடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில், 4 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்கள் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதிகள் என்று தெரிய வந்தது.

அவர்களில் ஜாபர் அகமது பால் என்பவர் லஸ்கர் இயக்கத்தின் மூத்த தளபதி ஆவார். காஷ்மீரில் ஏராளமான பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டவர்.

மற்றவர்களின் பெயர்கள் தவுபீக், அஷ்பக், அக்யுப் தார் என்று தெரிய வந்தது. இந்த சண்டையில், 3 ராணுவ வீரர்களும், ஒரு போலீஸ்காரரும் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறு பீரங்கிகளால் தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில், எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியானார். மேலும், 4 வீரர்கள் காயம் அடைந்தனர்.

பூஞ்ச் மாவட்டத்தின் மற்றொரு இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 5 வயது சிறுமி பலியானாள். மேலும், 15 பேர் காயம் அடைந்தனர். அதே சமயத்தில், பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.


Next Story