‘பிரதமருக்கு எதிராக போட்டி இல்லை’ - அமித்ஷாவை சந்தித்த பின் அய்யாக்கண்ணு பேட்டி


‘பிரதமருக்கு எதிராக போட்டி இல்லை’ - அமித்ஷாவை சந்தித்த பின் அய்யாக்கண்ணு பேட்டி
x

பிரதமருக்கு எதிராக போட்டி இல்லை என அமித்ஷாவை சந்தித்த பின் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

புதுடெல்லி,

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி முடிவடைந்தது.

தங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காததால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என அய்யாக்கண்ணு அறிவித்தார். இதற்காக அவர்கள் வாரணாசி செல்லவும் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் அய்யாக்கண்ணு டெல்லியில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல், தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமித்ஷாவை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு இந்த சந்திப்பு மன நிறைவு அளிப்பதால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

Next Story