பாகிஸ்தான் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளது : காங்கிரஸ் குற்றச்சாட்டு


பாகிஸ்தான் மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளது : காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 April 2019 6:46 AM GMT (Updated: 10 April 2019 6:46 AM GMT)

பாகிஸ்தான் மோடியுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது, மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த வாய்ப்பு ஏற்படும் என்று தான் கருதுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போது இம்ரான் கான் கூறும்போது:- “ இந்தியாவின் அடுத்த அரசு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்தால், அந்த அரசு, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்த அச்சப்படக்கூடும். வலது அமைப்புகளின் எதிர்வினைகளுக்காக காங்கிரஸ் அச்சப்படலாம். 

அதேவேளையில், பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகையான தீர்வு எட்டப்படக்கூடும். இந்தியாவில் என்ன நடக்கப்போகிறது என்பதை நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை.  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூவை போலவே பிரதமர் மோடியும், அச்சம் மற்றும் தேசியவாத உணர்வுகளை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்” என தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், இம்ரான்கான் பேசியதாக வெளியான தகவலை மேற்கோள் காட்டி மோடியை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக மோடியுடன் கூட்டு வைத்துள்ளது. மோடிக்கு வாக்களிப்பது பாகிஸ்தானுக்கு வாக்களிப்பது போன்றது. மோடி ஜீ,  முதலில் நவாஸ் ஷெரீப் மீது அன்பு கொண்டிருந்தீர்கள், தற்போது இம்ரான் கான் உங்களின் நேசத்துக்குரிய நண்பராகிவிட்டார். உண்மை வெட்ட வெளிச்சமாகிவிட்டது”  என்று தெரிவித்துள்ளார். 

Next Story