சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார் என பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
2019 தேர்தலில் பிரசாரத்தின் போது சபரிமலை விவகாரம் தொடர்பாக எந்த ஒரு அரசியல் கட்சியும் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தென்னிந்தியாவில் பிரசாரம் செய்த போது பிரதமர் மோடி பேசுகையில், கேரள மாநிலத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்து பேசினாலே பினராயி விஜயன் தலைமையிலான அரசு பக்தர்களை கைது செய்கிறது என்றார். இதற்கு பதிலடியை கொடுத்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பச்சை பொய்யை பேசுகிறார்; மக்களை தவறாக வழிநடத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்லத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பினராயி விஜயன், பிரதமர் மோடி பேசுவது மிகவும் பச்சையான ஒரு பொய்யாகும். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமரால் எப்படி கூறமுடிகிறது? என கேள்வியை எழுப்பியுள்ளார்.
“யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் சட்டத்திற்கு எதிரான செயலை செய்து இருப்பார். பிற மாநிலங்களில் பிரதமர் மோடியை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக சங்பரிவார் அமைப்பினர் சிறைக்கு செல்லாமல் இருக்கலாம். ஆனால் அது கேரளாவில் நடக்காது.
சபரிமலை விவகாரத்தில் மோடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசு தான் 144 தடை உத்தரவை பிறப்பிக்க மாநில அரசிடம் கேட்டுக்கொண்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய படைகளையும் அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் கூறியது,” என்றார்.
Related Tags :
Next Story