பிரசாரத்தில் வெறுப்பை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது - தேர்தல் ஆணையம்


பிரசாரத்தில் வெறுப்பை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 15 April 2019 11:59 AM GMT (Updated: 15 April 2019 12:20 PM GMT)

பிரசாரத்தில் வெறுப்பை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரெட்சில் யோகா ஆசிரியராக உள்ள ஹர்பிரீத் மன்சுகானி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். 2019 தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் மதரீதியாக மக்களிடத்தில் வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசினால் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுங்கள் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மத ரீதியில் விவாதம் மேற்கொள்ளும் மீடியாக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பா.ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத் மதரீதியில் பேசியதை கருத்தில் எடுத்துக் கொண்டது. இவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வியை எழுப்பியது.
 
'தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞரிடம், இதுவரை வெறுப்புணர்வுடன் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாக 3  பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள் என்று அறிகிறோம். அதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி என்று அறிந்தோம்'' என்றார்.

இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கையில், மதத்தின் பெயரில் பேசிய அவர்களுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு நாங்கள் ஆலோசனை கூறுவோம் அல்லது புகார் பதிவு செய்வோம். அவர்கள் பதிலளிக்க கால அவகாசம் அளிப்போம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம், “ஆகமொத்தம், தேர்தல் ஆணையம் ஒரு பல் இல்லாத அமைப்பு என்பதை சொல்கிறீர்கள். முதலில் நோட்டீஸ் விடுப்போம், அறிவுரை வழங்குவோம், பின்னர் வழக்குப்பதிவு செய்வோம் என்கிறீர்கள்.” பிரசாரத்தின் போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் விவகாரத்தில் நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரம் தொடர்பான காரணிகள் தொடர்பாக ஆராயப்படும் என்றது.

மாயாவதி மற்றும் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நாளை நடைபெறும் என தெரிவித்தது.

Next Story