பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி


பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 16 April 2019 7:34 AM GMT (Updated: 16 April 2019 7:34 AM GMT)

பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் , சிஎஸ்கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜா குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர். இவரின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.

இந்நிலையில், ஜாம்நகர் மாவட்டம், கலாவட் நகரில்  நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் பேரணி நடந்தது. அப்போது, ரவிந்திர ஜடேஜாவின் தந்தை அனிருதுசிங், சகோதரி நைனாபா ஆகியோர் பட்டிதார் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரு வேறு கட்சியில் இணைந்தனர். அதாவது,  ரவிந்திர ஜடேஜாவின் மனைவி பாஜகவிலும், அவருடைய  தந்தை, சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில்,  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரவிந்திர ஜடேஜா, " நான் பாஜகவை ஆதரிக்கிறேன்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜடேஜா பாஜகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "நன்றி ஜடேஜா, உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். 

Next Story