தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடும் உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி


தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடும் உத்தரவு ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 16 April 2019 9:40 PM GMT (Updated: 16 April 2019 9:40 PM GMT)

தேனி காதல் ஜோடி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கில் போடுவதற்கான கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

புதுடெல்லி,

தேனி மாவட்டம் காட்டூரை சேர்ந்தவர் எழில் முதல்வன். இவரும், தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியை சேர்ந்த கஸ்தூரியும் காதலர்கள். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இது தொடர்பாக கஸ்தூரியின் தந்தை 2011-ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் எழில்முதல்வனும், கஸ்தூரியும் சுருளி அருவி வனப்பகுதியில் பிணமாக கிடந்தனர். கஸ்தூரி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கருநாக்கன்முத்தன்பட்டியை சேர்ந்த திவாகரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் திவாகருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து திவாகரன் தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

இதனால் சுப்ரீம் கோர்ட்டில் திவாகர் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கீழமை நீதிமன்றம் போதிய அவகாசம் அளிக்கவில்லை. எனவே அவர் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கும் வகையில், 22-ந்தேதி திவாகரை தூக்கிலிட வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்வதாக அறிவித்தனர்.


Next Story