கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி


கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 April 2019 6:06 AM GMT (Updated: 17 April 2019 6:06 AM GMT)

கோடைமழை, சூறைக்காற்றால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 தினங்களில் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.  மேலும் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில்  மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இதேபோல் மத்தியபிரதேசத்தில் புயல் மழையில் சிக்கி, கடந்த 2 நாட்களில் 16 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மழை மற்றும் சூறைக்காற்றில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.  காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. 

Next Story