போலி வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்: ராகுல் காந்தி


போலி வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 17 April 2019 7:56 AM GMT (Updated: 17 April 2019 7:56 AM GMT)

போலி வாக்குறுதிகளை நான் அளிக்க மாட்டேன் என்று வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

வயநாடு, 

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி பேசியதாவது:- நான் போலி வாக்குறுதிகளை அளிப்பதற்காக இங்கு வரவில்லை. உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இங்கு வந்துள்ளேன். 2 கோடி வேலைவாய்ப்புகள் அளிப்பேன். ரூ.15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் போடுவேன் என  பொய் வாக்குறுதிகளை அளிக்க நான் விரும்பவில்லை. 

 தென் இந்தியாவில் போட்டியிட வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது, வயநாடு தொகுதிதான் மிகச்சிறந்த தொகுதி என்று நான் உணர்ந்தேன். ஏனெனில் பல்வேறு சிந்தனைகள், கலாச்சாரங்களை இந்த தொகுதி மக்கள் பிரநிதிதித்துவம் செய்கிறார்கள்.  மன் கி பாத் கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வந்து இருக்கிறேன். 

நான் இந்நாட்டின் பிரதமர் போல் வருகை தந்து, உங்களிடம் பொய் உரைக்க வரவில்லை. ஏனென்றால் உங்கள் திறமை, அறிவுக்கூர்மை குறித்து நான் நன்கு அறிவேன். சில மாதங்கள் மட்டுமே உங்களுடன் அன்பு கொள்ள வரவில்லை. இந்த அன்பு காலம்தோறும் தொடர வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளேன். என்னால் உங்களை புரிந்து கொள்ள முடியும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Next Story