நாங்கள் ஆட்சிக்குவந்தால், பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும் - பிரதமர் மோடி


நாங்கள் ஆட்சிக்குவந்தால், பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 April 2019 1:55 PM GMT (Updated: 19 April 2019 1:55 PM GMT)

கேரளாவில் சபரிமலை மற்றும் அய்யப்பன் கோவிலை வைத்து பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கேரளாவில் சபரிமலை மற்றும் அய்யப்பன் கோவிலை வைத்து பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், “மே மாதம் 23-ம் தேதிக்கு பின்னர் மத்தியில் பா.ஜனதா ஆட்சியமைக்கும், பக்தர்களின் நம்பிக்கைக்கு போராடும், இதற்கான நடைமுறைகள் நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்திற்க்கு செல்லும். நாம் அதற்கு அரசியலமைப்பு ஆதரவை கொடுப்போம்,” எனக் கூறியுள்ளார். 

சபரிமலையின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி, பா.ஜனதா தன்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது என்றார். பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை நாடகம் போடுகிறது என குற்றம் சாட்டியவர், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் மக்களின் உயிரைப்பற்றியோ, பக்தர்களின் நம்பிக்கை பற்றியோ கவலைப்பட மாட்டார்கள். இடதுசாரிகள் மத நம்பிக்கைகள், பாரம்பரியம் மற்றும் நீண்ட நாட்களாக வழக்கத்திற்கும் பாரம்பரியத்திற்கு எதிரானவர்கள். கேரளாவின் மக்கள் இறைவனின் பெயரைக் கூட சொல்ல முடியாத நிலை உள்ளது. மக்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.நாங்கள் அதற்கு எதிரானவர்கள். பாதுகாவலர்களாக நிற்கிறோம் என கூறியுள்ளார். 

ஏற்கனவே பிரதமர் மோடி சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசியதற்கு பினராயி விஜயன் பதிலடியை கொடுத்தார். அவர் பேசுகையில்,  பிரதமர் மோடி பேசுவது மிகவும் பச்சையான ஒரு பொய்யாகும். இதுபோன்ற ஒரு தவறான கருத்தை பிரதமரால் எப்படி கூறமுடிகிறது? என கேள்வியை எழுப்பினார்.  “யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர் சட்டத்திற்கு எதிரான செயலை செய்து இருப்பார். பிற மாநிலங்களில் பிரதமர் மோடியை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக சங்பரிவார் அமைப்பினர் சிறைக்கு செல்லாமல் இருக்கலாம். ஆனால் அது கேரளாவில் நடக்காது. 

சபரிமலை விவகாரத்தில் மோடி அரசு இரட்டை வேடம் போடுகிறது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசு தான் 144 தடை உத்தரவை பிறப்பிக்க மாநில அரசிடம் கேட்டுக்கொண்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய படைகளையும் அனுப்ப தயாராக உள்ளோம் என்றும் கூறியது,” என்றார். 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து சபரிமலையில் போராட்டம் நடைபெற்ற போது மத்திய அரசு தீர்வு  காண தலையிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


Next Story