ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு; சசிகலா சீராய்வு மனு தாக்கல்


ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு; சசிகலா சீராய்வு மனு தாக்கல்
x
தினத்தந்தி 24 April 2019 9:48 AM GMT (Updated: 24 April 2019 9:48 AM GMT)

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். #Doubleleafsymbol

புதுடெல்லி,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். இ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னம் மற்றும் அ.இ.அ.தி.மு.க. கட்சி பெயரை அனுமதித்து தேர்தல் கமிஷன் 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு முடிவடையும் வரை இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்தாமல் முடக்கிவைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியினருக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

சின்னம் ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் தொடர்ந்த வழக்கின் போது இரட்டை இலை கோரிக்கை தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.  இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்புக்கு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தரப்பு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.  அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Next Story