ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது


ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது
x
தினத்தந்தி 25 April 2019 9:15 AM GMT (Updated: 25 April 2019 9:15 AM GMT)

ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரெயிலில் பயணம் செய்யும் போது திருநங்கைகளால் தொல்லைகள் நேரிடுவதாகவும், அவர்கள் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டு நிலவுகிறது. சில நேரங்களில் பயணிகளிடம் மிகவும் மோசமாக நடப்பதாகவும், பணம் கொடுக்காத நிலையில் தாக்கவும் செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ரெயில்வே போலீசார் தொடர்ந்து நடவடிக்கையையும், கண்காணிப்பையும் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ. கோரிக்கைக்கு ரெயில்வே அமைச்சகம் பதில் அளித்துள்ளது. 2015 ஜனவரியில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் கடந்த ஒரு வருடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரெயில்வேயில் பாதுகாப்பு என்பது மாநிலத்தை சார்ந்தது, குற்றச்செயல்களை தடுப்பது, வழக்குகளை பதிவு செய்தல், அவற்றினை விசாரித்தல் மற்றும் ரெயில்வே வளாகம் மற்றும் இயங்கும் ரெயில்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவை மாநில அரசாங்கங்களின் சட்டப்பூர்வ பொறுப்பு ஆகும், அவை ரெயில்வே போலீஸ் மூலம் மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story