மாணவிகள்-இளம் பெண்கள் பாலாத்காரம் செய்து படுகொலை -கிணற்றில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்


மாணவிகள்-இளம் பெண்கள்  பாலாத்காரம் செய்து படுகொலை  -கிணற்றில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள்
x
தினத்தந்தி 30 April 2019 10:26 AM GMT (Updated: 30 April 2019 10:26 AM GMT)

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை தனது வீட்டு கிணற்றில் வீசி மறைத்த காம கொடூரன் போலீசார் வசம் சிக்கியுள்ளான்.

ஐதராபாத்

தெலங்கானாவின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் சிறுமியின் கைப்பை பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தபோது, அதில் மாயமான சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால் மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சீனிவாசன், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றினுள் வீசியுள்ளார். இதேபோன்று, கடந்த 1 மாத‌த்திற்கு முன் மோனிஷா என்ற இளம்பெண்ணையும் பலாத்காரம் செய்து உடலை கிணற்றினுள் வீசியதாக விசாரணையில் சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கிணற்றில் சோதனையிட்டபோது, மேலும் பல எலும்புகூடுகள் கைப்பற்றப்பட்டன. இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன் 2 இளம்பெண்கள் மாயமான சம்பவத்திலும் சீனிவாசனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சீனிவாசன் வீட்டை தீயிட்டு கொளுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story