3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரனுக்கு சமூகவலைதளத்தில் 600 பெண் நண்பர்கள்


3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரனுக்கு சமூகவலைதளத்தில் 600 பெண் நண்பர்கள்
x
தினத்தந்தி 3 May 2019 7:10 AM GMT (Updated: 3 May 2019 7:10 AM GMT)

3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரனுக்கு சமூகவலைதளத்தில் 600-க்கு மேற்பட்ட பெண் நண்பர்கள் உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் ஹாஜிபூர் கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் சிராவனி என்னும் இன்டர்மீடியேட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி காணாமல் போனார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிராவனியின் உடல் சீனிவாசரெட்டிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சீனிவாச ரெட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சீனிவாசரெட்டி அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டான். அதோடு, கிணற்றில் இருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. அது அதே பகுதியை சேர்ந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன மணீஷா என்னும் மாணவியின் எலும்புக்கூடு என கண்டிபிடிக்கப்பட்டது.

இதுவரை மொத்தமாக 3 சிறுமிகள் மற்றும் 1 பாலியல் தொழிலாளியை சீனிவாச ரெட்டி கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சீனிவாச ரெட்டி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும் நிலையில், அவனது சமூக வலைதள பக்கத்தை ஆராய்ந்த போலீசார் அதிர்ந்தனர்.

காரணம் அதில் 600-க்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்கள் அந்த பகுதியில் காணாமல் போனதாக தெரியவந்துள்ள நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். ஆனால் வழக்கில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும், தீவிரமாக விசாரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து  காவல்துறையினர் காணாமல் போன பெண்களை கண்டுப்பிடிப்பதில் துரிதமாக செயல்படவேண்டும் என உயர் அதிகாரிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story