காதலியுடன் ஊர் சுற்ற பைக் வாங்க பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர்


காதலியுடன் ஊர் சுற்ற பைக்  வாங்க பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர்
x
தினத்தந்தி 8 May 2019 10:34 AM GMT (Updated: 8 May 2019 10:34 AM GMT)

புதுச்சேரியில் காதலியை மகிழ்விக்க பேக்கரியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் குண்டுசாலை பகுதியில் கடந்த 5 வருடங்களாக அமுதா என்ற பெயரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடையை பூட்டிவிட்டு சென்றவர், நேற்று இரவு கடையை திறந்துள்ளார் .

அப்போது பேக்கரியின் மேல்கூரை பிரிக்கப்பட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் இருந்த 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 பவுன் தங்க காசுகள் திருடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமிராவின் ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பேக்கரிக்கு எதிரே பழக்கடை நடத்தி வரும் மதியழகன் என்பவரை போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பைக் ஒன்றை மதியழகன் வாங்கியுள்ளார். திடீரென அவருக்கு ஆடம்பரமான பைக் கிடைத்தது எப்படி என விசாரித்ததில் பேக்கரியில் கொள்ளையடித்ததை  ஒப்புக்கொண்டுள்ளார். தனது காதலியை மகிழ்விக்க பேக்கரியில் பணத்தை திருடி புதிய பைக் வாங்கியதாகவும், காதலிக்கு தங்க சங்கிலி வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மதியழகனை கைது செய்த போலீசார் பைக் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story