எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை


எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
x
தினத்தந்தி 10 May 2019 6:16 AM GMT (Updated: 10 May 2019 6:16 AM GMT)

அதிமுக அதிருப்தி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்.

புதுடெல்லி,

அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.  

இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த மாதம் 30-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரத்தில் தி.மு.க. சார்பில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்  2 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

அத்துடன், மனுவின் மீது பதில் அளிக்க சபாநாயகர் ப.தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதை தொடர்ந்து சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சுப்ரீம் கோர்ட்டில் தனியாக மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்  பிரபு எம்.எல்.ஏ.க்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். ஜூலை 12 ந்தேதிக்குள் சபாநாயகர் ப.தனபால் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை  தள்ளி வைத்தனர். 

Next Story