2002-ல் மோடியை முதல்வர் பதவியில் இருந்து வாஜ்பாய் நீக்க விரும்பினார்: யஷ்வந்த் சின்கா


2002-ல் மோடியை முதல்வர் பதவியில் இருந்து வாஜ்பாய் நீக்க விரும்பினார்: யஷ்வந்த் சின்கா
x
தினத்தந்தி 11 May 2019 1:19 AM GMT (Updated: 11 May 2019 1:19 AM GMT)

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார் என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தெரிவித்தார்.

போபால்,

மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யஷ்வந்த் சின்கா கூறியதாவது:- குஜராத்தில் 2002-இல் மதக் கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை ராஜினாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.

2002-இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ராஜினாமா செய்ய ஒருவேளை மறுத்தால் குஜராத் அரசை கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார். 

கட்சிக்குள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், மோடி அரசு கலைக்கப்பட்டால், நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அவர் வாஜ்பாயிடம் கூறினார். இதனால், தனது முடிவை செயல்படுத்தாமல் வாஜ்பாய் நிறுத்தி வைத்தார் “ இவ்வாறு அவர் கூறினார். 


Next Story