ரூ.6 கோடி கொடுத்து ‘சீட்’ வாங்கினாரா, ஆம் ஆத்மி வேட்பாளர்? - தேர்தல் கமிஷன் விசாரிக்க பா.ஜனதா வலியுறுத்தல்


ரூ.6 கோடி கொடுத்து ‘சீட்’ வாங்கினாரா, ஆம் ஆத்மி வேட்பாளர்? - தேர்தல் கமிஷன் விசாரிக்க பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 May 2019 10:30 PM GMT (Updated: 11 May 2019 9:50 PM GMT)

கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி லஞ்சம் தந்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ‘சீட்’ வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் தற்போதைய எம்.பி.யும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பர்வேஷ் வர்மாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுபவர், பல்பீர் சிங் ஜாக்கர்.

இவர் ‘சீட்’ வாங்குவதற்காக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி லஞ்சம் கொடுத்தார் என்று புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை எழுப்பி இருப்பவர், வேறு யாருமல்ல; வேட்பாளரின் மகன் உதய் ஜாக்கர்.

ஆனால் இந்தப் புகாரை பல்பீர் சிங் ஜாக்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதையொட்டி அவர் கூறுகையில், “ இந்தப் புகாருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி என் மகனிடம் எதுவும் விவாதிக்கவில்லை. நான் அவரிடம் பேசுவதே மிகவும் அபூர்வம். அவர் பிறந்த நாளில் இருந்து தாய்வழி தாத்தா, பாட்டி வீட்டில் இருந்து வருகிறார். நான் என் மனைவியை 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். அவர் என்னுடன் 6 அல்லது 7 மாதம்தான் சேர்ந்து வாழ்ந்தார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அரசியல் கட்சிகளில் உள்ள சமூக விரோத சக்திகள் என் மகனின் அறிக்கைக்கு பின்னால் உள்ளன” எனவும் கூறி உள்ளார்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனை பா.ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதையொட்டி அந்தக் கட்சியின் டெல்லி தலைவர் பிரவிண் காண்டல்வால் கூறும்போது, “கணக்கில் வராத பணம், தேர்தலில் பயன்படுத்தப்படுவது தொடர்பான முக்கிய விவகாரம் இது. இதில் கெஜ்ரிவாலையும், அவரது குழுவினரையும் அம்பலப்படுத்த வேண்டும். லஞ்சத்தைப் பெற்றதற்கும், தவறான வழிகளில் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் இது செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

அத்துடன் இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், பல்பீர்சிங் ஜாக்கர் உள்ளிட்டவர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

உதய் ஜாக்கர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று தேர்தல் நடக்கிற நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்பீர் சிங் ஜாக்கர் லஞ்சம் ரூ.6 கோடி தந்தார் என்ற புகாரை, அவரது மகனே எழுப்பி இருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story