நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது


நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 12 May 2019 1:43 AM GMT (Updated: 12 May 2019 3:40 AM GMT)

நாடாளுமன்ற 6வது கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது.

புதுடெல்லி,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  இவற்றில் 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இன்று 6வது கட்ட தேர்தல், 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.

தேர்தலில் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டு பதிவு நடைபெறுகிறது.  ஓட்டு பதிவு நடைபெறும் 59 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி 45 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான அப்னா தளம், லோக்ஜனசக்தி ஆகியவை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி, இந்திய தேசிய லோக்தளம் ஆகியவை தலா ஒரு இடத்தையும், திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.  இதனால் ஆளும் பா.ஜ.க.வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தல் இருக்கும்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கிற 7 மாநிலங்களில் அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

7வது இறுதி கட்ட தேர்தல் 19ந்தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது.  இதன்பின் 23ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

Next Story