டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி? - அதிகாரிகள் விளக்கம்


டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி? - அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 12 May 2019 10:00 PM GMT (Updated: 12 May 2019 9:31 PM GMT)

டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சிக்கியிருக்கும் இந்த போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில தகவல்களை நேற்று வெளியிட்டனர்.

அதன்படி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 9-ந்தேதி அந்த நாட்டை சேர்ந்த நொம்சா லுடாலோ (வயது 31) என்ற பெண் வந்துள்ளார். அவரை சோதனையிட்டபோது அவரிடம் 24.7 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் இருந்தது.

அதை பறிமுதல் செய்ததுடன், அந்த பெண்ணையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணிடம் அந்த போதைப்பொருளை கொடுத்தது நைஜீரியாவை சேர்ந்த ஹென்றி இடியோபர் (35) என்ற வாலிபரும், சிமாண்டோ ஒகோரா (30) என்ற பெண்ணும் என தெரியவந்தது.

அதன்படி நொய்டாவில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது ஏராளமான கேன்கள் மற்றும் பெட்டிகளில் 1,818 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி என தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story