குஜராத் முதல்வராக மோடியின் ஆட்சி இந்தியாவிற்கே கறை - மாயாவதி தாக்கு


குஜராத் முதல்வராக மோடியின் ஆட்சி  இந்தியாவிற்கே கறை - மாயாவதி தாக்கு
x
தினத்தந்தி 15 May 2019 9:34 AM GMT (Updated: 15 May 2019 9:34 AM GMT)

குஜராத் முதல்வராக மோடியின் ஆட்சி இந்தியாவிற்கே கறை என மாயாவதி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

உ.பி.யில் நேற்று பிரசாரம் செய்த பிரதமர் மோடி, எனக்கு பினாமி சொத்து, பண்ணை வீடு, வணிக வளாகம், வெளிநாட்டு சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா என எதிர்க்கட்சிகளுக்கு கேள்வியை எழுப்பினார்.  சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கரம் கோர்த்து உள்ளன என்று சொன்னால், அது அவர்களது ஊழலை மறைப்பதற்காகவும், ஊழலில் தொடர்புடைய உறவினர்களைக் காப்பாற்றவும்தான் எனக் கூறினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, குஜராத் முதல்வராக மோடியின் ஆட்சி இந்தியாவிற்கே கறையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தனிநபரின் சொத்து எனக் கூறி பிரதமர் மோடி அனைத்து எல்லையையும் தாண்டிவிட்டார். பினாமி சொத்துக்கள் வைத்துள்ளவர்களும், ஊழல் செய்தவர்களும் பா.ஜனதாவில் எப்படி தொடர்பு கொண்டுள்ளார்கள் எனபதை இந்த தேசமே அறியும். பிரதம மந்திரி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பது காகிதத்தில் மட்டும் உள்ளது, அதேபோன்றுதான் அவர் நேர்மையானவர் என்பதும் காகித அளவிலே உள்ளது. 

எனக்கு முன்னதாகவே அவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். ஆனால் அவருடைய ஆட்சி அவருக்கு மட்டுமல்ல பா.ஜனதா, தேசத்தின் இனவாத வரலாற்றின் கறையாகும். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையும் மிகப்பெரிய ஊழல்தான், அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

Next Story