அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியானது


அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியானது
x
தினத்தந்தி 15 May 2019 11:30 PM GMT (Updated: 15 May 2019 11:08 PM GMT)

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க ரூ.5,029 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்கு முன்பு பணமாக வழங்கப்பட்டது. இதில் கருப்பு பணம் புழங்குவதாக புகார் எழுந்ததால் இதனை தடுக்க தேர்தல் பத்திரங்களாக வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பதிவு பெற்ற அரசியல் கட்சிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகளும் இந்த தேர்தல் பத்திரங்களை பெறமுடியும்.

இந்தியாவை சேர்ந்த தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தேர்தல் பத்திரத்தை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அவர்கள் வங்கி கணக்கு மூலம் அந்த பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே வழங்கும். இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.

ரூ.5,029 கோடி

இந்நிலையில், மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் மனோரஞ்சன் ராய் என்பவர், இதுவரை எத்தனை தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு? வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர் என்ன? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார்.

இதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் நரேஷ்குமார் ரஹேஜா பதில் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மே 4-ந் தேதி வரை மொத்தம் ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் 9 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாங்கிய தனிநபர் அல்லது நிறுவனங்கள் பெயரை வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதனை தெரிவிக்க முடியாது. வெளியிட்ட 10,494 தேர்தல் பத்திரங்களில் 10,388 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.5,011 கோடி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல் பற்றி கருத்து தெரிவித்த மனுதாரர் மனோரஞ்சன் ராய் கூறியதாவது:-

தேர்தல் பத்திரங்கள் அதிகரித்திருப்பது அரசியல் கட்சிகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தூய்மையற்ற தொடர்பை சட்டபூர்வமாக்கியது தானே தவிர வேறு ஒன்றுமில்லை. இது நாட்டில் பெரிய அளவிலான ஊழலுக்கு தான் வழிவகுக்கும். தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டு இருந்தால் இந்த அழிவு சற்று குறையும்.

பெரு நிறுவனங்கள் இவ்வளவு பெரிய தொகையை சமுதாய பொறுப்புள்ள திட்டங்களுக்கோ, ஏழைகள் மற்றும் தேவையுள்ள பயனாளிகளுக்கோ செலவழித்து இருக்கலாம். மற்றபடி இந்த நன்கொடை அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு தான் பயன்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story