மேற்குவங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் ஓய்கிறது தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை


மேற்குவங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் ஓய்கிறது தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2019 11:45 PM GMT (Updated: 15 May 2019 11:16 PM GMT)

அமித்ஷா பேரணியில் வன்முறை ஏற்பட்டதாலும், வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையாலும் மேற்குவங்காளத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரம் முடிவதாக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பிரமாண்ட பேரணி நடத்தினார். அப்போது அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர்.

அப்போது திடீரென பேரணி மீது சிலர் கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. இதில் வித்யாசாகர் கல்லூரிக்கு வெளியே இருந்த வாகனங்கள் தீவைத்து எரிக் கப்பட்டன. கல்லூரி முன்பு இருந்த தத்துவ மேதை வித்யாசாகர் சிலையும் உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்பு சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரஸ்பர குற்றச்சாட்டு

இந்த சிலை உடைப்புக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் தான் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிலை உடைப்பு வீடியோவை வெளியிட்டு இது பா.ஜனதாவினரின் செயல்தான் என கூறினர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்காள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் சென்றன. இந்த மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வழக்கமாக நாளை (வெள்ளிக் கிழமை) மாலை 6 மணிக்கு முடிவடைய வேண்டும்.

தேர்தல் கமிஷன் நடவடிக்கை

இந்நிலையில் தேர்தல் கமிஷன் அரசியல்சாசன 324-வது சட்டப்பிரிவின்படி தேர்தல் பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே நிறுத்த உத்தரவிட்டுள்ளது. 9 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் வியாழக் கிழமை (இன்று) இரவு 10 மணியுடன் முடிகிறது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

அதோடு கொல்கத்தாவில் நடைபெற்ற வன்முறை காரணமாக மாநில அரசின் உள்துறை முதன்மை செயலாளர், சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரை அந்த பதவியில் இருந்து விலக்குவதாகவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Next Story