‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்


‘நாதுராம் கோட்சே தேசபக்தர்’ சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்
x
தினத்தந்தி 16 May 2019 6:06 PM GMT (Updated: 16 May 2019 8:33 PM GMT)

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டார்.

போபால்,

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று பா.ஜனதா பெண் வேட்பாளர் பிரக்யாசிங் தாக்குர் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் மன்னிப்பு கேட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 12-ந் தேதி தனது கட்சி வேட்பாளர் மோகன்ராஜூவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன். நான் காந்திஜியின் கொள்ளுப்பேரனாக இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

இந்து தீவிரவாதம் என அவர் கூறிய வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டன. அவர் மீது வழக்குகள் குவிகின்றன.

இந்த நிலையில் பெண் சாமியாரும், மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார்.

அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை.

இதையொட்டி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் விடுத்துள்ள அறிக்கையில், “ மகாத்மா காந்தி தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் கூறிய கருத்தை முற்றிலும் ஏற்க முடியாது. இந்த கருத்துக்காக அவருக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறினார்.

மேலும், “ஏன் அவர் இப்படிச்சொன்னார் என்பதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்படும். தனது ஆட்சேபகரமான கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்பதுதான் சரியாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

பிரக்யாசிங் தாக்குரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

இதை அவரது செய்தி தொடர்பாளர் டாக்டர் ஹிதேஷ் பாஜ்பாய் தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங்கிடம் பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டாரா என ஹிதேஷ் பாஜ்பாயியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என பதில் அளித்தார்.


Next Story