இரு தரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் : டெல்லியில் 2 பேர் சுட்டுக்கொலை


இரு தரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் : டெல்லியில் 2 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 20 May 2019 10:00 PM GMT (Updated: 20 May 2019 9:27 PM GMT)

டெல்லியின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி, 

டெல்லியின் பரபரப்பான பகுதியான துவாரகா மோர் மெட்ரோ ரெயில்வே நிலையத்தின் அருகில் நேற்று முன்தினம் மாலை காரில் வந்த இருபிரிவினருக்கு இடையே சொத்து பிரச்சினையின் காரணமாக திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு காரில் வந்த 3 பேர் மற்றொரு காரில் தப்பிச்சென்ற பிரவீன் கெலோட் என்பவரை, சினிமாவில் வருவது போல் துரத்திச்சென்றனர். அப்போது அவர்கள் துப்பாக்கி சூடும் நடத்தினர். பதிலுக்கு பிரவீனும், அவருடன் இருந்தவர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினரும் 15 முறைக்கு மேலாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து போலீசார் மோதலை தடுக்க முயன்றனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்ததால் போலீசாரும் வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தி கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயற்சித்தனர்.

இந்த துப்பாக்கி சண்டையில் டெல்லி, அரியானாவில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய பிரவீன் கெலோட், விகாஸ் தலால் ஆகிய இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 பேர் காரில் தப்பிச்சென்றுவிட்டனர். விரைவில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதியில் சினிமா காட்சி போல் நடந்த இந்த பயங்கர சம்பவம் டெல்லியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.


Next Story