ஐஸ்வர்யா ராய் மீம்ஸ் விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம், மன்னிப்பு கோருகிறேன் -விவேக் ஓபராய்


ஐஸ்வர்யா ராய் மீம்ஸ் விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்,  மன்னிப்பு கோருகிறேன் -விவேக் ஓபராய்
x
தினத்தந்தி 21 May 2019 5:50 AM GMT (Updated: 21 May 2019 5:50 AM GMT)

நடிகை ஐஸ்வர்யாராயின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டதற்கு விளக்கம் அளிக்குமாறு, நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

இந்தி நடிகர் விவேக் ஓபராய், கருத்துக்கணிப்பை கிண்டலடிப்பதாக கூறி, டுவிட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டார். அதில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிகர் சல்மான்கான் உள்ள புகைப்படத்தை கருத்துக்கணிப்பு என்றும், 2-வது புகைப்படத்தில் நடிகர் விவேக் ஓபராயுடன் ஐஸ்வர்யா ராய்  இருந்த புகைப்படத்தை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றும், 3-வது புகைப்படத்தில் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகளுடன் ஐஸ்வர்யா ராய் இருந்த புகைப்படத்தை தேர்தல் முடிவு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விவேக் ஓபராய் இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என இந்தி நடிகர், நடிகைகளும் வலியுறுத்தி உள்ளனர்.

இதற்கு  தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது. மகளிர் ஆணையத்தின் டுவிட்டில், விவேக் ஓபராயின் பதிவு மிகவும் குற்றமானது, நெறிமுறைகளை மீறியது, பெண்களின் மாண்பு மீதும், பெண்கள் மீதும் அவர் எந்த அளவுக்கு அவமரியாதை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த விவேக் ஓபராய், தாம் தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஏற்கனவே யாரோ ஒருவர் உருவாக்கி இருந்த மீம்ஸை சுட்டிக்காட்டியே தாம் கருத்து தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான இந்த மீம்ஸை பார்த்தவுடன் எனக்கே சிரிப்பு வந்து விட்டது. இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள். மராட்டிய மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸை எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நோட்டீஸ் வந்தவுடன் அவர்கள் முன் நேரில் சென்று என் விளக்கத்தை அளிப்பேன். எதற்காக இதனை பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அரசியலாக்கக் கூடாது  எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தான் வெளியிட்ட ஐஸ்வர்யா ராய் குறித்த படத்தை விவேக் ஓபராய் தனது டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டு, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.

அதில், நான் கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தில் மிகவும் பின்தங்கியநிலையில் இருக்கும் 2 ஆயிரம் ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்வை பெற்றுக்கொடுத்திருக்கிறேன். நான் ஒருபோதும் பெண்களுக்கு எதிராக அவமரியாதை செய்தேன் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. நான் வெளியிட்ட ஒரு மீம்ஸ்க்கு ஒரு பெண்ணை பாதித்து எரிச்சலடைய வைத்திருந்தால்கூட அதற்கு பரிகாரம் தேடுகிறேன். மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய டுவீட் நீக்கப்பட்டுவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.


Next Story