வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன -பிரணாப் முகர்ஜி


வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன -பிரணாப் முகர்ஜி
x
தினத்தந்தி 21 May 2019 12:14 PM GMT (Updated: 21 May 2019 12:14 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தலில் 67.11 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யப்படுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன. இது வாக்காளர்களின் தீர்ப்பை சேதப்படுத்துவதாகும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. 

நமது ஜனநாயகத்தின் அடிநாதத்தையே சந்தேகத்துக்குள்ளாக்கும் காரணிகளை அனுமதிக்க இயலாது. ஆணையத்தை சுற்றி உலாவாரும் வதந்திகளுக்கு  தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனக்கூறியுள்ளார்.

வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக, தேர்தல் ஆணையத்தில்  எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய  நிலையில் பிரணாப் முகர்ஜியின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிரணாப் முகர்ஜி, மக்களவை தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story