உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய 13 எம்.எல்.ஏ.க்கள் - இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு


உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய 13 எம்.எல்.ஏ.க்கள் - இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 22 May 2019 9:45 PM GMT (Updated: 22 May 2019 8:44 PM GMT)

உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 13 எம்.எல்.ஏ.க்கள் களமிறங்கியதால், இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு ஏற்படலாம் என தெரிகிறது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 13 பேர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட்டனர்.

அதன்படி ஆளும் பா.ஜனதா கட்சி 9 எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கியது. இதில் 4 பேர் மந்திரிகள் ஆவர். இதைப்போல சமாஜ்வாடி 2 எம்.எல்.ஏ.க்களையும், பகுஜன் சமாஜ் மற்றும் அப்னாதளம் கட்சிகள் தலா ஒருவரையும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கின.

இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்களின் சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய வாய்ப்பு ஏற்படும். அந்தவகையில் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என தெரிகிறது.

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், அப்போதைய பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுமார் 13 பேர் எம்.பி.க்களாக தேர்வாகினர். பின்னர் 14 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான சமாஜ்வாடி 13 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலுமே வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story