நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி


நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 9:25 PM GMT (Updated: 24 May 2019 9:25 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட, 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள், ஏற்கனவே பதவியில் இருக்கும் எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கின. இதில் 27 பெண்கள் உள்பட 197 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவை சேர்ந்த 145 எம்.பி.க்கள் தங்கள் பதவியை மீண்டும் உறுதி செய்திருக்கின்றனர். இவர்களில் நிதின் கட்காரி, கிரண் ரெஜிஜு, ஜூவல் ஓரம், ராதாமோகன் சிங், பாபுல் சுப்ரியோ போன்றவர்கள் முக்கியமானவர்கள் ஆவர்.

பீகாரில் பா.ஜனதாவை சேர்ந்த 12 பேர் மீண்டும் எம்.பி.க்கள் ஆகி உள்ளனர். மேலும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 2 பேரும், லோக் ஜனசக்தியை சேர்ந்த 3 பேரும் மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளனர். டெல்லியை சேர்ந்த 5 எம்.பி.க்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் மகுடம் சூடியிருக்கின்றனர்.

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி 9 எம்.பி.க்களை மீண்டும் களமிறக்கியது. இதில் 2 பேர் மட்டுமே தங்கள் பதவியை உறுதி செய்துள்ளனர். இதைப்போல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த 2 எம்.பி.க்களும் மீண்டும் வென்றுள்ளனர்.

இவ்வாறு பல கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி வாகை சூடிய நிலையில், மீண்டும் களமிறங்கியவர்களில் ஒருவர் கூட தொகுதியை தக்க வைக்க முடியாத நிலையை அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story