முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி


முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 25 May 2019 1:36 PM GMT (Updated: 25 May 2019 1:36 PM GMT)

முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை என கட்சியினரிடம் தெரிவித்தேன், ஆனால் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முந்தைய தேர்தலில் 34 இடங்களை பிடித்திருந்தது. இந்த பின்னடைவு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.  

பாஜகவின் இந்த வெற்றி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் அவசரக் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார்.

கூட்டம் முடிந்த பின செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:- 

பாஜகவின் இந்த வெற்றியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயமில்லை. 

மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது.  நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தோம். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

6 மாதங்களால் என்னால் பணியாற்ற முடியவில்லை என கட்சியினரிடம் கூறினேன்.  முதல்-மந்திரியாக தொடர விருப்பம் இல்லை என கட்சியினரிடம் தெரிவித்தேன். ஆனால் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். 

கட்சி சின்னம் தான் எனக்கு மிகவும் முக்கியம். மக்கள் துணிவான முடிவு எடுத்தால் என்னால் முதல்-மந்திரியாக தொடர முடியும். எங்களின் ஓட்டு வங்கியை அதிகரிக்க நினைக்கிறோம். இடதுசாரிகள் ஓட்டு தான் பாஜகவுக்கு சென்றுள்ளது என்றார்.

Next Story