பெயரை கேட்டு விட்டு முஸ்லிம் வாலிபரை துப்பாக்கியால் சுட்ட குடிபோதை ஆசாமி
பீகாரில் பெயரை கேட்டு விட்டு முஸ்லிம் என அறிந்து கொண்டு வாலிபரை குடிபோதை ஆசாமி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பெகுசராய்,
பீகாரில் பெகுசராய் மாவட்டத்தில் கும்பி கிராமத்தில் வசித்து வருபவர் முகமது காசிம் (வயது 30). இவர் தள்ளுவண்டியில் வைத்து சலவை தூள் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், குடிபோதையில் வந்த ஆசாமி ஒருவர் அவரை வழிமறித்து, உனது பெயரென்ன? என்று கேட்டுள்ளார்.
அவர் பதிலளித்ததும், நீ ஒரு முஸ்லிம். இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என அந்த ஆசாமி கூறியிருக்கிறார். இதன்பின் கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து காசிமை நோக்கி சுட்டுள்ளார். இதில் அவரது பின்பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.
அந்த துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு இருந்துள்ளது. இதனால் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்ப அந்த ஆசாமி முயன்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அந்நபரை தள்ளி விட்டு அங்கிருந்து காசிம் தப்பியோடி உள்ளார். அருகில் இருந்தவர்கள் யாரும் அவரது பாதுகாப்பிற்கு வரவில்லை. இதன்பின்பு காசிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜீவ் யாதவ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story